கவிதை


நிலவின் ஒளியினைப் பருகி

லயித்த பனித்துளியொன்று

பாய்ந்து பளிச்சிடுகிறதென்

அந்தரங்க வெளியினில்

காலத்தின் பிரக்ஞையற்று

பட்டாம்பூச்சியாய்

திசைகளெங்கும் சிதறடிக்கும் என்னிடம்

நிறங்களுதிர்த்து நிர்வாணியாய் திரியென்று

மகரந்தம் பரவிய விரல்களினால்

சமிக்ஞை செய்கிறாய்

நிமிடத்தில் நிறைவேற்றி

உனைத்தீண்ட முயல்கையில் உடலுதிர்த்து வரும்படி

கட்டளையிடுகிறாய்

ஆட்சேபணைகளின்றி அடிபணிகிறேன்

உன் இம்சைகளைக் கொண்டாடுவதில்

பூரணமடைகிறதென் காதல்

என்னுயிர் நாதத்திலிருந்து ஒலிக்கிறது

உனக்கான வசியப்பாடல்

ஒளி உமிழும் இதழ்களுடன்

கணநேரத்தில் ஓராயிரம் அபிநயங்களுடன்

நர்த்தனம் புரிந்து

வண்ணத்தீற்றல்களுக்கு இடையே

மலராக மின்னி மறைகிறாய்

மகரந்தவாசம் நிரம்பியயென்

வெளியெங்கிலும்

பொழிகிறது தேன் துளிகள்.

No comments:

Post a Comment